பிறந்த நாள்! 2015
இதை காட்டிலும் வேறொரு நாள் இருக்க முடியாது நம் ப்ரியத்தை பகிர.
இன்று என் அண்ணனின் பிறந்த நாள்!
பேரன்பு. பெரும் ப்ரியம், யாரும் மாற்ற முடியா நம்பிக்கை, உண்மையின் பின் வந்த உரிமை, ஆன்ம பலம், நட்பு, பற்றுதல்
இந்தனை வார்தையும் அண்ணன் என்ற அந்த ஒற்றை சொல்லுக்குள் நிறையும் என்றால் அவனை அண்ணன் என்றும் சொல்லலாம்.
என் வாழ்வின் கடந்த இந்த 15 வருடங்களிள் அவன் அற்ற மகிழ்வு, துக்கம், வெற்றி, தோல்வி ........ என ஏதுமிருக்கவில்லை.
இவனை போல் வேறொரு பெண்ணுக்கு இவ்வுலகில் இது போன்றொரு உறவு கிடைத்திருக்குமா? என்றால் இல்லையென்றே சொல்வேன்.
நட்பு, ப்ரியம், சகோதரத்துவம் என்ற எந்த கோட்டுக்குள்ளும் அவனை சரியாய் நிறுத்திடவிட முடியாது.
எப்போதும் தாங்க இயலா அன்பினை தந்து யாரையும் ஒப்பிட முடியா வானளாவிய ப்ரியத்தை தருபவன் அவன்.
எப்போதும் நண்பனின் காதலியுடன் சகோதரத்துவம் கொள்ளும் நம் முன் வழி வந்தவன் தான் இவனும். நண்பனின் காதலுக்கு
வக்காலத்து வாங்கி வாதிட வந்தவனிடம் “ உன் சகோதரி என்பினும் இதை கேட்பாயா? “ என்ற கால் நூற்றாண்டு கேள்விக்கு
பதிலொன்றும் சொல்லி போக வில்லை அந்நாளில்.
இரண்டொரு நாளில் வந்து “இனி நீயும் என் சகோதரியே, ஏற்கெனவே இரண்டு இப்போது உன்னோடு மூன்று” என்றான்.
அதோடு நின்றிருக்கவில்லை நண்பன் இனி மச்சான் என்றான்.
விசித்திரம்!
வாழ்வும் கிட்ட தட்ட சினிமா போலவே பல நேரங்களில்!
இதுவும் அதேமாதிரி மாறி போவான், அல்லது மறந்து போவான் என்ற எல்லோரின் எண்ணங்களை தவிடு பொடியாக்கினான்
அதன் பின் வந்த நாட்களில்.
எங்கள்(நானும், நவினும்)காதல் கண்ணியமானதன் காரணம் இவனே!
எங்கள் இருவரின் விளிம்பு நிலைகளை இவனே தீர்மானித்தான். பெருங்கோபம் வந்ததுண்டு அந்நாட்களில், அதன் பின்னான
அவன் உண்மை அன்பின் அடர்த்தி அதை சமன் செய்து போகும்.
நகர்ந்தன நாட்கள். வாழ்வின் பயணத்தில் எத்தனை நிறுத்தங்களில் நான் இறங்கினேனோ அங்கெல்லாம் இறங்குவான்,
மீண்டும் தொடரும் பயணத்தில் மீண்டும் என்னுடனே பயணிப்பான். வழி அத்தனையிலும் மூச்சு முட்டும் அளவு பேரன்பை
தருவான்.
இன்றும் அவனை பொருத்தமட்டில் சகோதரிகள் முன்று. பரிசு, உரிமை, சடங்குகள், சம்பரதாயங்கள் அத்தனையும் ஒன்று தான்.
அன்பை மட்டும் மற்ற இருவரை காட்டிலும் கொஞ்சம் (நிறைய) அதிகம் தருகிறான்.
என்னுடன் பயணித்த இத்தனை வருடங்களில் அவனுக்கு என்னிடமிருந்து கோபம், அவமானம், வெறுப்பு, உதாசீனம், சில
நேரங்களில் உரிமை இதை தவிர வேறொன்றும் கிடைத்திருக்கவில்லை. அவனுக்கு வேறு எதுவும் வேண்டியதுமில்லை, என் இருப்பை தவிர.
என் மீதான அன்பு அவனுக்கு அனிச்சை செயலாகி போனது இப்போதெல்லாம். என்னின் அன்பை என் பிள்ளைகளும்
கிடைக்கபெறுகிறார்கள் இந்த மாமனிமிருந்து இப்போதெல்லாம்.
“இதெல்லாம் இன்னும் எத்தனை நாள்
நவீன் பானு கல்யாணம் வரைக்கும்,
இதெல்லாம் இன்னும் எத்தனை நாள்
நவீன் பானுக்கு குழந்தை வர வரைக்கும்
இதெல்லாம் இன்னும் எத்தனை நாள்
இவனுக்கு ஒரு கல்யாணம் ஆறவரைக்கும்
இதெல்லாம் இன்னும் எத்தனை நாள்
இவனுக்கு ஒரு குழந்தை வர வரைக்கும்”
அத்தனையும் நடந்தது! நம் இருவரும் கரம் பற்றிய படி!
கெடு விதித்தவர்கள் அத்தனை பேரும் வாயடைத்து போனார்கள்.
எந்த நிலையிலும் நி என்னை விட வில்லை இதுவே நிதர்சனம்.
தன்மானம் தந்தும் உடன் நின்றாய்.
யாரும் அறியா தருணம் ஒன்று உண்டு எங்கள் இருவரிடையே. அந்த சூழல் சொன்னது இவன் என் உடன் பிறவா, பிரியா,
உயிர், வாழ்வின் கொடை என்று.
ஒரு நாள் மருத்துவர் சொன்னார் அதே சினிமா பாணியில் கடவுளை வேண்ட Biopsy result சாதகமாய் வர.
கண்ணீர், வேண்டுதல், நம்பிக்கை என அத்தனை தந்து, ஒரு கணம் மரணம்தனை மிரள செய்தான் அவன்.
அவன் பிராத்தனை பலித்து மீண்டும் வாழும் வாய்பொன்று கிடைக்க கை வலிக்க 200 தேங்காய் கடவுளுக்கு உடைத்த
அவனுக்கு என்ன செய்ய என்ற கேள்விக்கு இன்னும் பதில் தேடி கொண்டிருக்கிறேன் நான்.
மறக்க, பிரிய, வெறுக்க, நிராகரிக்க இயலா அன்பை தரும் அவனை எத்தனை காயப்படுத்தியிருக்கிறேன். அதை உரிமை என்று
கதை சொன்னாலும்,
இணையில்லா அவன் அன்புக்கு
இயன்றவரை அன்பு செய்தல் ஒன்றை தவிர வேறு பரிகாரம் இருந்திட முடியாது.
இவை அத்தனைக்குமாய் மன்னிப்பு, நன்றி, அன்பு அத்தனையும் சேர்த்து சொல்கிறேன்.
பிறந்த நாள் வாழ்துக்கள் அண்ணா!
வாழ்க நீ வளமாய், அதனால் நாங்கள் வாழ்வோம் நலமாய்!
உன் இருப்பின் பொருள் உணர்ந்து, உன் நலனில் அக்கறை கொள் இனி வரும் நாட்களில்.
பிறந்த நாள் வாழ்துக்கள் அண்ணா!
(நம்பிக்கை என்ற ஒரு சொல்லின் பின் நின்று இந்த பாசமலர்கள் இன்றும் இணைந்திருக்க காரணமான
நவீன், கவுதமிக்கு எங்களின் அளவில்லா நன்றிகள்)





Comments
Post a Comment